சென்னை

கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் அவர்கள்  பட்டப்படிப்பு வரை இலவசமா கல்வி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அரசு பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   நோய்த் தொற்று குறைந்து வந்த போதிலும் மரண எண்ணிக்கை குறையாமல் உள்ளது.   பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைவதால் குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆகும் அவலம் உள்ளது.

இதையொட்டி தமிழக அரசு இந்த குழந்தைகளுக்காக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.  முதல்வர் மு க ஸ்டாலின் நடத்திய இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலர் பங்கு கொண்டனர்.   ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ மாவட்ட ஆட்சியர் தலைமை ஒரு சிறப்புப் பிரிவு இயங்கி வருகிறது.  இவர்களுக்கு மேலும் உதவிகளை அளிக்க முதல்வர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில்” கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ₹5 லட்சம் வைப்பீடு (டெபாசிட்) செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.   பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

இந்த குழந்தைகளுக்குப் பட்டப்படிப்பு  வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்..  கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம்  வழங்கப்படும்.    அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.   ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட,   நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும்”  எனக் கூறப்பட்டுள்ளது.