சென்னை: தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2.98 லட்சம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் 17ம் தேதியன்று அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

இறுதியாகக் கிடைத்தத் தரவுகளின்படி, கிராம பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு மொத்தம் 2.06 லட்சம், பஞ்சாயத்து தலைவர்களுக்கு 54,747, பஞ்சாயத்து யூனியன் வார்டுகளுக்கு 32,939, மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு 3,992 என வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்தன. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை இந்தத் தேர்தல்களில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இந்தக் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் பொங்கலுக்குப் பிறகு நடைபெறும் என தெரிகிறது.