சென்னை

மேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பாக உள்ள தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்

உலகெங்கும் பலராலும் விரும்பி பார்க்கப்படும் ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் தி ஃபேமிலி மேன் 2 என்னும் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.  இந்த தொடரில் ஈழத் தமிழர்கள் குறித்து தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த தொடரை ஒளிபரப்பக் கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோட் தங்கராஜ் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளர்.  அத கடிதத்தில் அவர்,“தி ஃபேமிலி மேன் 2 என்னும் தொடர் ஈழத்தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய  வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கியதால் கண்டனத்துக்குரியது ஆகும்.

இதில் தமிழ்ப் பேசும் நடிகையான சமந்தாவை தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தியுள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் ஆகும்.

இது போன்ற உள்நோக்கமும் விசமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. நமது ஈழத் தமிழர்கள் இலங்கையில் சமத்துவம், நீதி,  அமைதி மற்றும் கண்ணியத்திற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம்  இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும்.

இத் தொடர் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது. ஆகவே இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவது கடினம். எனவே அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில்  ஒளிபரப்பப்படவுள்ள இந்தத் தொடரை தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.