சென்னை

மேகதாது அணை கட்டுவது குறித்த கர்நாடக அமைச்சர் சிவகுமார் கருத்துக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிராச் கட்சி தனது அமைச்சர்களுக்கு இலகா ஒதுக்கீடு செய்துள்ளது.  அதன் அடிப்படையில் டி கே சிவகுமாருக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.   கர்நாடக அமைச்சர் சிவகுமார் சமீபத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் எனவும் அதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையொட்டி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாக இன்று  காலை பத்திரிகையில் செய்து வந்துள்ளது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார், மக்களின் வாழ்த்துகளைப் பெறுவதில் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்துக் கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும், இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவக்குமார் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தைச் செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்குச் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனைப் பாதிக்கும். எனவே, தமிழகத்துக்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல “

எனத் தெரிவித்துள்ளார்.