சென்னை:

நீட் விலக்கு கோரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே தமிழகஅரசு இயற்றிய இரு மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“நீட் தேர்வு மசோதாக்கள் மீதான ஒப்புதலை, குடியரசுத் தலைவர் அவர்கள் நிறுத்தி வைத்த விவரத்தை தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவித்து விட்டோம்” என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த “நீட் “ மசோதாக்கள் தொடர்பான வழக்கினை, அடுத்து நடவடிக்கையின்றி முற்றுப்புள்ளி வைத்து, முடித்து வைப்பதற்கு மட்டுமே அ.தி.மு.க அரசு உதவிசெய்து ஆர்வம் காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் மசோதாக்களுக்கு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை, சதி எண்ணத்துடன் பாழ்படுத்தியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி. இந்த துரோகத்தை இளைஞர் சமுதாயம் அறவே மன்னிக்காது.

“இந்த அவையிலே இரண்டு நீட் மசோதாக்கள் ஏகமனதாக, ஒருமனதாக 1.2.2017 அன்று நிறை வேற்றப்பட்டு ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவை எந்த நிலையில் இருக்கிறது” என்று 28.6.2018 அன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜய பாஸ்கர், “ஜனாதிபதி அவர்கள் அதை நிறுத்தி (withheld) வைத்திருக்கிறார். ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (withheld)? என்று நம்முடைய அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டி ருக்கிறது”என்று பதிலளித்தார்.

ஆனால் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பியே வந்து விட்டன என்ற உண்மையை பேரவைக்கும், பேரவையின் மூலமாக நாட்டுக்கும், தெரிவிக்காமல் மறைத்தார். அந்த மசோதாக் களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்பி வைத்ததையும் மறைத்தார்.

ஒப்புதல் அனுப்பிவிட்டாலே, மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள். இந்நிலை யில் மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் மசோதாக்கள் “நிராகரிக்கப்பட்டதா” “நிறுத்தி வைக்கப்பட்டதா” என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தப்பட்டது.

இறுதியில் “நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட கூட்டத் தயார்” என்று முதலமைச்சரே அறிவித்தார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுகளை அ.தி.மு.க அரசு படித்துப் பார்த்தாலே “நீட் மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது; மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கிறது” என்பது தெளிவாகத் தெரிய வரும்.

ஆனால் நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றி, அனுப்பி வைத்து மத்திய பா.ஜ.க அரசை சங்கடப்படுத்தக் கூடாது என்ற உள் நோக்கத்துடன், “விளக்கம் கேட்கிறோம்” என்ற போர்வையில் கடிதங்களை எழுதி, அ.தி.மு.க அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசுடன் நீட் விவகாரத்தில் ஒத்திசைந்து போக வேண்டும் என்பதற்காக, தமிழக சட்ட மன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை நீர்த்துப் போக வைக்கவே முதலமைச்சர் திரு பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சரும் “கடித நாடகத்தை” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

2018 ஜூன் மாதத்தில் நீட் மசோதாக்கள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் நடைபெற்ற வாதங்களின் நடவடிக்கைக் குறிப்புகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அ.தி.மு.க அரசு, சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களின் நடவடிக்கைக் குறிப்புகளை ஏன் தாக்கல் செய்யவில்லை? அந்த விவாதத்தின் போது, “நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவோம்” என்று முதலமைச்சர் அவையில் அளித்த உறுதிமொழியை உயர்நீதிமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை?

முதலமைச்சர் அவையில் கொடுத்த உறுதிமொழியைக் கூட உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் இருப்பது, நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றும் மன நிலையில் அ.தி.மு.க அரசு இல்லை என்பதையும், நீட் பிரச்சினையை மூடிமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தெளிவாக்குகிறது.

சமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் நீட் தேர்வைக் கொண்டு வந்து, ஏழை – நடுத்தர கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் மருத்துவக் கனவுகளையும் சிதறடித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு அ.தி.மு.க அரசு முழுக்க முழுக்க உடந்தையாக இருக்கிறது. ஆகவேதான் நீட் தேர்வு மசோதாக்களுக்கு அனுமதியும் பெறாமல், இது குறித்த சட்டமன்றத்தில் பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற விவாதங்களின் முழு தகவல்களையும் உயர்நீதிமன்றத்திற்கும் தெரிவிக்காமல்- தமிழக மக்களுக்கும் தெரிவிக்காமல் உள்நோக்கத்துடன் அ.தி.மு.க அரசு செயல்படுகிறது.

நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் செயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியும், அமைச்சர் திரு.விஜயபாஸ்கரும் துணை போயிருக்கிறார்கள். தங்களின் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நீட் மசோதாக்களை பலி கொடுத்து – தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளார்கள். இருவரின் துரோகச் செயலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது.

ஆகவே “கடிதம் எழுதுகிறோம்” என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும்; அனுப்பி வைத்துவிட்டு சும்மா இருக்காமல், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரைச் சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும்; என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.