சென்னை

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மேலும் 100 விரைவு பேருந்துகளை அரசு இயக்க உள்ளது.

தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது.   இதையொட்டி பாதிப்பில்லா மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.  பேருந்துகள் 50 பயணிகளுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இயங்கி வருகின்றன.  ஆயினும் வெளியூர் செல்லும் பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகள் பயணம் செய்கின்றனர்.

அதே வேளையில் நீண்டதூரம் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   தமிழக அரசு தற்போது 300 விரைவு பேருந்துகளை  இயக்கி வருகிறது.  இவை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் சேலம், கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வருகை அதிகரித்துள்ளதையொட்டி தமிழக அரசு கூடுதலாக 100 விரைவு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.  மேலும் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் முழு அளவில் இயக்கப்பட உள்ளன.  கடந்த 3 நாட்களாகக் குறைவான அளவில் ஆம்னி பேருந்துகள் இயங்கிய நிலையில் இன்று முதல் புது காலாண்டு பிறப்பதால் முழு வீச்சில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.