டில்லி

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தனது அமைச்சர்களுக்கு எதிரான பொது நல வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி மனு அளித்துள்ளது. 

 

உச்சநீதிமன்றத்தில் சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி சார்பில் வக்கீல் சமீர் மலிக் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில்

‘தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த், தயாநிதி மாறன், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோருக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.   சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அமைச்சர்களுக்கு எதிராகத் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ 

என்று கூறியிருந்தார்.

அக்டோபர் 20 ஆம் தேதி இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு விசாரித்து இருதரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்டு, ‘இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்த ஆட்சேபனைகளைப் பதில் மனுவாக 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், சி.பி.ஐ. இயக்குநருக்கும், தமிழக டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டது.

டிசம்பர் 4-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களுக்கு மனுவைத் தள்ளிவைக்குமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டதையடுத்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.  தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அமைச்சர்களுக்கு எதிராகத் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்குகளை விசாரிக்கத் தொடங்கி உள்ளதால், இந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தேவையில்லை. தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின் விளக்கமான மனுத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்ததுடன், வழக்கு விசாரணையை மார்ச் 5-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.