சென்னை
தமிழக அரசு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை காரணமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. ஆனால் காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று அதிகம் பதிவாகி வருகிறது. அதே வேளையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற மார்ச் 2-ந்தேதி வரை, கடலோர மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இன்று (வியாழக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மார்ச் 1-ந்தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
எனவே தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.