சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் டிவிட்டரில் பாஜகவின் சதிகளை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் எனப் பதிவு இட்டுள்ளார்.

வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெற உள்ளது. பல்வேறு முக்கிய அறிவிப்புக்கள் இந்த கூட்டத்தொடரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காமல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் (எக்ஸ்) பதிவில்,

“வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில், நாம் ஒன்றிணைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது.

நமது நோக்கம் தெளிவாக உள்ளது:

பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்குச் சளைக்காதீர்கள்.

வலுவாக நிற்கவும், குரல் எழுப்பவும், மணிப்பூர் வன்முறை மற்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்ட முறைகேடுகள் போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

நாம் ஒன்று சேர்ந்து, பாஜகவின் சதிகளை முறியடித்து, நமது மாபெரும் குடியரசின் நீதியை உறுதி செய்ய முடியும்”

என்று தெரிவித்து உள்ளார்.