சென்னை

நிலுவையில் உள்ள 21 சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்துள்ளார்

இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.  அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.  இச்சந்திப்பின்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரிடம் வலியுறுத்தினார்.  இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரை, முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.