மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களை தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

“இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.