டில்லி:

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி இன்று காலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார். முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்த நிலையில், தொடர்ந்து நிர்மலா சீத்தாராமனையும் சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று 5வது நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், தலைமை செயலாளர்கள் உள்பட முக்கிய அதிகாரிகள் டில்லி சென்றுள்ள நிலையில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர்களும் சென்றனர்.

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று காலை  சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக் கோரும் அறிக்கையை  சமர்ப்பித்தார்.  தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. அவரிடமும் தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகள் குறித்து முதல்வர் பேசியதாகவும், நிர்மலா சீத்தாரமான்,  நம்பிக்கை தரும் வகையில் பதில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.