சென்னை

இன்று 22 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்துள்ளது.  இதையொட்டி தற்போது 22 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.   இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள், தேநீர்க்கடைகள், அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில் ஒன்று தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் காணொலி முறையில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.  இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.  கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு அமலாக்கம் குறித்து ஆட்சியர்களிடமும் காவல் கண்காணிப்பாளர்களுடனும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிவார் எனத் தெரிகிறது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மருத்துவத் துறை உயரதிகாரிகளிடமும் கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் பேசுவார் எனக் கூறப்படுகிறது. இப்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே 22ஆம் தேதி முதல் மேலும் தளர்வுகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.