விழுப்புரம்
சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று விழுப்புரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்,
”தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை தராதது கண்டனத்திற்கு உரியது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிதியை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு விரைவில் தமிழகத்திற்கு நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து குதர்க்கமாக பேசி வருகிறார். இது தேவையற்ற சர்ச்சை. தமிழக அரசியலை அவர் வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய விரும்புகிறார். இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் இருப்பதாக நான் கூறினேன். அதற்கு, அவர்கள் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல. உண்மையில் அவர்கள் ஒட்டாமல் இருக்கிறார்கள் அதற்காகத்தான் அப்படி கூறினேன்”
என்று கூறியுள்ளார்.