டெல்லி:
திருப்பூர் டாக்டர் டெல்லியில் கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்த சரவணன் கடந்த ஜூலை 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. இவர் திருப்பூர் அருகே வெள்ளியங்காடு கோபால் நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மகன்.
saravanan
சரவணன் மரணம் குறித்து, அவரது தந்தை கணேசன் கூறியதாவது:
எனது மகன் சரவணன் கொலை செய்யப்பட்டு 1½ மாதம் ஆகியும் முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை என எதுவுமே இதுவரை வழங்கவில்லை. திட்டமிட்டு எனது மகனை கொலை செய்துள்ளனர். என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை.
எனவே எனது மகன் சாவு குறித்து,  நீதிமன்ற கண்காணிப்பில் நேர்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்  என்றார்.
மேலும், எனது மகன் கொலையில், தமிழக அரசும், தமிழக எம்.பி.க்களும் எனது மகனுக்கு நீதி கிடைக்கவும், தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவும் வழி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கணேசன் கூறினார்.