திரும்லை:
திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த சிறுத்தைகளால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த, சிறுவனை சிறுத்தை ஒன்று வாயில் கவ்விச் சென்றது.

பெற்றோர் மற்றும் கண்காணிப்பு படையினரின் முயற்சியால் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டன. இதேபோல, தனது குடும்பத்துடன் பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். வனப்பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலைப்பாதையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்த்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை முதல் (ஆகஸ்ட் 14) 15 வயதுட்குட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரையாக மலையேறி செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இருசக்கர வாகனத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலையேறி செல்லும் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண் விவரங்கள் அடங்கிய டேக் ஒன்றை கையில் கட்டி காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.