சென்னை: ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! என தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.வின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக விமர்சித்திருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வினையாற்றி வருகின்றன. ரஜினி ரசிகர்கள், தவெகவுக்கு எதிராக களமிறங்குவோம் என எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது
“தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல். திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”
வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!
அன்புடன்
ரஜினிகாந்த்”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
