சண்டிகர்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு, ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா திடீரென விலகினார். தோனி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் வெளியேறியதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தமது மாமா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதால், ஊர் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவரத்தை ரெய்னா தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தாக்குதலுக்கு ஆளானவர்களில் 2 பேர் உயிரிழக்க மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெய்னாவின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள முதலமைச்சர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டார்.

சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கில், போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்களிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் 11 பேரை தேடி வருவதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.