மதுரை: கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய ஹிஜாப்  தீர்ப்பை எதிர்த்து நடத்திய தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், 9 பேரின் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரண முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்புக்கு எதிர்த்து இஸ்லாமிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நீதிபதிகளுக்கு எதிராக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியிருந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகார்கள் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து,  மதுரையைச் சேர்ந்த அசன்பாட்ஷா, அபிபுல்லா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனிஉமர்கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவில், நாங்கள் யாரும் நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவோம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், மனுதாரர்கள் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை மட்டும் செய்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் மனுதாரர்கள் எதுவும் பேசவில்லை. இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸாரிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. திடீரென டிராக்டரை மேடையாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஒலிபெருக்கி பயன்படுத்தியுள்ளனர். மனுதாரர்கள் மீது வேறு வழக்குகளும் உள்ளன. நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.