சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்கு உரிய பயனர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின்படி பயன்பெறும்  பயனாளிகள் தேர்தெடுப்பதற்காக,   இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் வழங்கி, அவற்றை பதிவு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக கடந்த ஜூலை 24-ம்தேதி முதல் 3 நாட்கள் நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர்,  ஜூலை 27-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆக.4-ம் தேதியுடன் முடிந்ததது.

பின்னர், இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு ஆக.5 முதல் 16-ம் தேதி வரை நடைபெற்று வந்தது. இதற்கான விண்ணப்ப விநியோகம்  ஆகஸ்டு 1ந்தேதி தொடங்கியது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  என தமிழக அரசு அறிவித்து உள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், தகுதிவாய்ந்த மகளிர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய இயலாத குடும்பத் தலைவிகள், 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்ட உள்ளது. துவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் 3 நாள் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்.15-ம் தேதி, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் அன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான இடம் தேர்வுசெய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம், முதல்வரின் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

காஞ்சிபுரத்தில், பயனாளிகள் சிலருக்கு நேரடியாக உரிமைத்தொகை வழங்கும் முதல்வர், அப்போதே வங்கிக்கணக்கில் மீதமுள்ளவர்களுக்கு பணத்தை செலுத்தும் வசதியையும் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.  அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பயனர்களின்  விண்ணப்பங்கள் அனைத்தும் இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு செப்.15-ம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ.1000 பணம் வரவுவைக்கப்பட உள்ளது.