மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறும் என கோவில் அறங்காவலர் குழு அறிவித்து உள்ளது.
முருகன் குடியிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை சிலர், தங்களுக்கே சொந்தம் என சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு பங்குனி திருவிழாவை கோலாகலமாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செடய்துள்ளது.
அதன்படி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாக் கொடியேற்றம் மார்ச் 5-ம் தேதி என்றும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 19ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்ய பிரியா, துணை ஆணையர் எம்.சூரிய நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாக் கொடியேற்றம் மார்ச் 5-ம் தேதி காலை 9.15 மணி முதல் 9.45 மணிக்குள் நடைபெறும். இதைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி யானை வாகனத்தில் கைபாரம் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 13-ம் தேி பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெறும். முக்கிய விழாவான பட்டாபிஷேகம் மார்ச் 17-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் நடைபெறும்.
மார்ச் 18-ம் தேதி பகல் 12.15 முதல் 12.45 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச் 19-ம் தேதி காலை 6 முதல் 6.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். மார்ச் 20-ம் தேதி தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவு பெறும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.