மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்த மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்களை அப்படியே விட முடியுமா? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல் செய்யவில்லை? என்று தலைமைச்செயலாளரிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், அரசு அலுவலர்கள் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். தெரிந்தே செய்த யாரையும் மன்னிக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இரண்டு முறையும் அவர் உத்தரவிட்டும் மனுதாரர் ராம ரவிக்குமார் மலையில் தீபம் ஏற்ற தமிழக காவல்துறை மறுத்து விட்டது. தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விடும் என தமிழக அரசு குற்றம்சாட்டி மறுப்பு தெரிவித்து விட்டது.
இதற்கிடையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே, மதுரையில் 144 தடை போடப்பட்டது. மேலும் தேவையின்றி, அரசு காவல்துறையை அதிக அளவில் குவித்து பற்றத்தை உருவாக்கியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிசுவாமிநாதனே விசாரித்து வருகிறார். ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியர் துணை காவல் கண்காணிப்பளர் நேரில் ஆஜரான நிலையில், தலைமை செயலாளர் முருகானந்தம் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது நீதிமன்ற உத்தரவை மதிக்காதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அரசின் நடவடிக்கையையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த வழக்கு டிசம்பர் 9ந்தேதி விசாரணைக்கு மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோக நாதன், மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கண்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலி வாயிலாக ஆஜராகினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ”நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியரையும், நீதிமன்றம் சொல்லியும் 144 தடை உத்தரவை ரத்து செய்யாத மதுரை துணை ஆணையரையும் மன்னிக்கவே முடியாது” என்றார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, ”நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உத்தரவிட்ட பிறகும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த விடாமல் தடுத்த சக்திஎது? என கேள்வி எழுப்பியவர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வாய்மொழி சொன்னாரா? அவர் சொல்லி தான் இப்படி செஞ்சிங்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மதுரை துணை ஆணையர் இனிகோ திவ்யன், ”இது நானாக சுயமாக எடுத்த முடிவு” என்றார்.
அப்போ, நீங்கள் ”வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்களை அப்படியே விட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் “தீபத்தூண் அமைந்துள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, முருகனுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் முஸ்லிம்கள் பிறைகொடி ஏற்ற சென்றபோது, அதை தடுக்க அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை , சட்டவிரோதமாக அத்துமீறி, அங்குள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதித்தீர்கள்? அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்து, ஏன் ஏன் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பியவர், அதற்கு முழுமையாக ஒரு மாதம் அவகாசம் இருந்தும் எழுத்துப்பூர்வ பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை” என அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக அத்துமீறி, அங்குள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதித்தீர்கள்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதில் ஏதேனும் முரண் உள்ளதா? கல்லத்தி மரத்தில் கொடியேற்ற கோவில் தரப்பிடம், தர்கா தரப்பு அனுமதி பெறவில்லை. என்ன செய்யலாம்? நீங்களே பரிந்துரையுங்கள் என தெரிவித்தார்.
அதற்கு கோவில் நிர்வாகம் தரப்பில், புகார் அளிப்பதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
அதையடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படுகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தெரிவிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
[youtube-feed feed=1]