சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனிடம், ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். இது தமிழ்நாடு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடல்நலன் விசாரித்தார். சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்த நிலையில், திருமாவிடம் எடப்பாடி பேசியிருப்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான திருமாவளவன் நேற்று காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்க  சாதாரண காய்ச்சல் என்றும்,  அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வரும் 30 ஆம் தேதிவரை கட்சி தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்க வரவேண்டாம் என விசிக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமாவிடம் போன் மூலம் நலம் விசாரித்தார். மேலும் பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.  இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன், டெல்லியில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றார். அதேபோல், சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத்  ரயில் துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம் என தொடர் பயணம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.