புதுச்சேரி:

பிரச்சித்தி பெற்ற புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசை யாக நடைபெற்றது. தேரின் வடத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் இழுத்தனர்.

மாநிலத்தின் அதிகாரம் யாருக்கு என சண்டையிட்டு வரும் இருவரும் ஒன்றாக சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

1400 ஆண்டுகள் பழைமையானது திருக்காமீஸ்வரர் சிவன் கோவில். இது புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரில் உள்ளது. இங்கு அம்பாளாக  கோகிலாம்பிகை வீற்றிருக்கிறாள்.  இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான  பிரமோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அவர்க ளுடன் அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாலன் தீப்பாய்ந்தான் சுகுமாறன் ஆகியோரும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வந்த கிரண்பேடி அங்கு சாமி தரிசனம் செய்தார்.