திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவில் உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79 வது ஆலயம். விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்ற காலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் ஸ்தாபித்து வழிபட்டார். அதனால் ‘கணபதீச்சரம்’ எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவதாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து செய்யுலால் அறியலாம்.

மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன.பல்லவ மன்னனின் படை தளபதியாக வாழ்ந்த பரஞ்சோதியாரை அவரது சிவபக்தியை மெச்சி சிவத்தொண்டு புரிய மன்னன் வேண்டுகொண்டான். அவரும் சிறுத்தொண்டர் என்ற பெயருடன் மங்கை நல்லாள் என்பவரை மணந்து சீராளன் என்ற மகனை பெற்று சீராட்டி வளர்த்து வந்தார். தினமும் சிவதொண்டர்களுக்கு உணவு படைத்து பிறகுதான் உணவு உண்பார்கள். ஒரு நாள் சிவனடியார்கள் யாரும் வராததால் சிவதொண்டரே கோயிலில் உள்ள திரு ஆத்திமரத்தின் கீழே அமர்ந்து இருந்த ஒரு சிவனடியாரை உணவருந்த அழைத்தார்.

சிவனடியாரோ திருத்தொண்டரிடம் அவரின் மகனை அறுத்து சமையல் செய்தால் மட்டுமே உணவருந்த வருவேன் என்று கூறுகிறார். சிறுத்தொண்டரும் மகனை வெட்டி கறி சமைத்தார். சிவனடியார் சாப்பிடும் முன்பு சிறுத்தொண்டரிடம் அவரின் மகனோடு உணவருந்த விருப்பம்தெரிவித்தார். என்னசெய்வது என்று தெரியாமல் அவர் வெளியில் நின்று மகனை அழைக்கிறார். அப்போது அதிசயமாக கறிசமைத்த மகன் ஓடிவருவதை கண்டு மகனுடன் வீட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு உணவருந்த வந்த சிவனடியார் சிவனாக அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த அடியார் பெருமகனார், திருஞானசம் பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர்.