நெட்டிசன்

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

இதையெல்லாம் பெருசா விவாதிக்க மாட்டேன் என்கிறார்கள்..

மிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் அண்மை காலமாக நடக்கும் சம்பவங்களை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் வேட்டு வந்து விடும் போலிருக்கிறது..

குற்றம் செய்து பிடிபடும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள், போலீசாரையும் நீதித்துறையையும் அவ்வளவு இளக்காரமாக நினைக்கிறார்கள், நக்கல் அடித்து பேசுகிறார்கள்.

அவர்களிடம் எதைப் பற்றியுமே பயமில்லை. “அடிக்கப் போறியா எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ. நீ அடிச்சு நான் செத்து போயிட்டா எனக்கு ஒன்னும் இல்ல. நீ தான் பின்னாடி மாட்டிகிட்டு சாவே” என்று கூலாகச் சொல்கிறார்கள்..

இந்த குற்றத்தை செய்தால், இங்கே சரண் அடைய வேண்டும் இத்தனை நாளில் பெயில் கிடைத்துவிடும், சட்டம் நம்மளை இந்த அளவுக்கு தான் தண்டிக்க முடியும், அதுக்கே கூட ஏகப்பட்ட வருஷம் ஆகும் போன்றவை தெள்ளத்தெளிவாக இளைய தலைமுறை மண்டையில் ஏறி இருக்கின்றன.

நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் தாறுமாறாக டூவீலர் ஓட்டிக் கொண்டு வந்த ஐந்து இளைஞர்களை அங்கே டீ குடிக்க வந்த இரண்டு பேர் தட்டி கேட்டிருக்கிறார்கள்.

உடனே அந்த இளைஞர்கள் இரண்டு பேரையும் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்து பத்தாயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்கள். நம்மை யார் என்ன செய்து விடப் போகிறார்கள் என்று ஆணவமான மனநிலை இது..

இதே மனநிலை தான் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும தலை தூக்கி வருகிறது.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பார்த்து பயந்து நடுங்க வேண்டிய நிலை. எதை தட்டிக் கேட்க போனாலும் மடை மாற்றப்பட்டு ஆசிரியர்கள் மீது பழி வந்து சேர்கிறது.

பாடத்திட்டங்களோடு, ஒரு குற்றத்தை செய்தால் அதற்குண்டான பின் விளைவுகள் என்னென்ன? நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பமும் எப்படியெல்லாம் பாதிக்கப் படும்? சமூகத்தில் உங்கள் குடும்பம் எப்படிப்பட்ட அவமானங்களை சந்திக்கும் என்பதையெல்லாம் மாணவ மாணவியருக்கு தனி பாடமாகவே நடத்தியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

எல்லாவற்றிற்கும் காரணம் கஞ்சா பழக்கம். இதுவரை இல்லாத அளவிற்கு கஞ்சா புழக்கம் அவ்வளவு அதிகமாக இருக்கிறது பலரும் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.

ஒரு சாவுக்கு போனா குடிச்சிட்டு ஆடுறவன் பத்து பேருன்னா கஞ்சா அடிச்சுட்டு ஆடுறவன் ஆறு பேரு இருக்கான். அவர்களை தட்டி கேட்டால் அங்கேயே இன்னொரு பிணம் விழும் போல.

காவல்துறை நினைத்தால் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க முடியும். ஆனால் அதில் உள்ள சிலர் கேவலம் தம்மா தூண்டு மாமுலுக்காக கஞ்சா பார்ட்டிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கஞ்சா புழக்கம் பற்றி புகார் சொல்லப்போனால், புகார் சொல்பவர்களையே ஆபத்தில் சிக்க வைத்து விடுகிறார்கள். இந்த கஞ்சா போதை கும்பலிடம் சிக்கியுள்ள இளைஞர்கள் மத்தியில் தான் தங்களுடைய பிள்ளைகளும் வளர்கிறார்கள் என்பதை மாமுல் வாங்கும் காவல்துறையினர் மறந்து விடுகிறார்கள். தாங்கள் மாமூல் வாங்கி வளர்த்து விடும் அதே கஞ்சா கும்பலால் என்னைக்காவது ஒரு நாள் தங்கள் வீட்டு பெண்களுக்கும் ஆபத்து வரலாம் என்பதையும் போலீசார் உணர்வது இல்லை.

‘மாமுல்’ காவல்துறையினர்தான் அப்படி என்றால் அரசாங்கம் என்ன செய்கிறது?

கஞ்சா விஷயத்தில் காவலர்கள் தவறு செய்தால் அவர்களை இடமாற்றம் செய்கிறார்கள், பணி மாற்றம் செய்கிறார்கள், இல்லை என்றால் காத்திருப்பு பட்டியலில் வைக்கிறார்கள் அவ்வளவுதான். இதையே இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

மாநில அளவில் சோதனை நடத்தக்கூடிய அதிகாரமிக்க சிறப்பு படைகளை உருவாக்கி, திடீர் திடீரென சோதனை நடத்தி எங்கெல்லாம் கஞ்சா பிடிபடுகிறதோ அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரை உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த வேண்டும்.

கஞ்சா புழக்கத்துக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது வழக்கு பதிவு, கைது என அவர்களையும் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கினால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு காண முடியும்.

ஒரே வரியில் சொன்னால் இளைய சமுதாயம் மோசமான பாதையில் பயணிப்பதை எல்லோரும் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வேடிக்கை பார்ப்பதில் அரசாங்கம் முன்னணியில் இருக்கிறது.

இதை சொன்னால் ஏதோ திட்டமிட்டு ஆட்சிக்கு எதிராய் பேசுவதாக ஒரு தரப்பினர் பொங்கலாம்.

எதிர்கால ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற உங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் உங்கள் குடும்பத்து பெண்களுக்கும் சேர்த்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் 42,548 பேர்! காவல்துறை கண்காணிப்பு…

சென்னையில் கொடிகட்டி பறக்கும் போதை பொருள் வியாபாரம்! டோர் டெலிவரி செய்த 4 பேர் கொண்ட கும்பல் கைது..

கொடுங்கையூரில் ‘மெத் லேப்’ என்ற பெயரில் போதை பொருள் தயாரித்து விற்பனை! திமுக கவுன்சிலர் மகன் உள்பட 7 கல்லூரி மாணவர்கள் கைது!

போதைபொருள் நடமாட்டம் அதிகரிப்பு: வழக்குகளை சிபிஐக்கு மாற்றப்போவதாக நீதிமன்றம் எச்சரிக்கை…