சென்னை:
திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் – தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள்,

  • தற்போது திரையரங்குகளில் 50% மக்கள் அனுமதிப்பதற்கு பதிலாக 100% மக்களை அனுமதிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • திரையரங்குகளால் கொரோனா பரவியதற்கான எந்தவித அத்தாட்சிகளும் இல்லை. ஆகவே 100% பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  • தற்போதுள்ள சூழ்நிலையில் 12% மற்றும் 18%வரியுடன் 8% உள்ளாட்சி வரி சேரும்போது வரிப் பளுவினால் திரையரங்குகள் நடத்த முடியாத சூழ்நிலை. ஆகவே, பொதுமக்கள் வருவதற்கு 8% வரி உயர்வை நீக்கினால் மக்கள் வருகை அதிகரிக்கும்.
  • திரையரங்குகளின் உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பது என்றிருப்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றி தர வேண்டும்.
  • புதிய திரையரங்குகளுக்கும் ஏற்கனவே உள்ள திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்றுவதற்கும் பொதுப்பணித் துறையின் அனுமதி மட்டுமே போதும் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
  • தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், பழைய ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
  • திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளதால் பார்வையாளர் இல்லாத ஒரு சூழ்நிலையில் வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
  • அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் சினிமா தியேட்டர்கள் கொரோனோவால் 8 மாதங்கள் மூடப்பட்டதால், அந்த பாதிப்பிலிருந்து சினிமா தொழிலை மீட்க அந்த மாநில அரசுகள் சில சலுகைகளை அறிவித்துள்ளது
  • ரூ10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று அறிவித்துள்ளது.
  • தியேட்டர்களில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி வழங்கியுள்ளது.
  • நகரங்கள் புற நகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் உதவியும், கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ 5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு, இந்த கடன்களுக்கு வட்டி இல்லை என்று அரசு அறிவித்திருக்கிறது.
  • இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக அரசு நமது மாநிலத்தில் உள்ள தியேட்டர்களுக்கும் மேற்கண்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.