காவலரை ரவுடி தாக்கும் சி.சி.டி.வி. காட்சி

காவலரை தாக்கிய மூன்று ரவுடிகள் ஒன்று போல் குளியலறையில் விழுந்து காயம் ஏற்படுத்திக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மூவரும், காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஒன்று போல் குளியலறையில் விழுந்து காயம் ஏற்படுத்திக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடியால் தாக்கப்பட்ட காவலர் மருத்துவமனையில்..

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன். இவர் நேற்றிரவு காட்டுப்பாக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கரவாகனத்தில் வந்த மூன்று பேரிடம் விசாரணை செய்தார்.

காவலரின் கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். ஆகவே சந்தேகமடைந்த காவலர் அன்பழகன், செல்போன் செயலியை கொண்டு அவர்களை ஸ்கேன் செய்துள்ளார். காவல்துறையினர் பயன்படுத்தும் இந்த ஃபேஸ் ஆப்பில் குற்றவாளிகளின் பெயர்கள் மற்றும் அவர்கள் மீது காவல்நிலையத்தில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட குற்றப்பிண்ணனி தெரியவரும்.

காவலர் அன்பழகன் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர்,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு காவலரை தாக்கினார். கை மற்றும் கால்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த காவலருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தாக்கிய மூவரும் தப்பித்துவிட்டனர்.

குளியலறையில் வழுக்கி விழுந்ததாக சொல்லப்படும் ரவுடிகள்

இச்சம்பவம் தொடர்பாக பூவிருந்தவல்லி காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் இந்த மூவரையும் காவலர் அன்பழகன் தனது செல்போனில் படம்பிடித்திருந்தால் அதனைக் கொண்டு விசாரித்தனர். காவல்துறையினர் பயன்படுத்தும் ஃபேஸ் ஆப்பில் அந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்தபோது அவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்தது. . மூன்று நபர்களில் இருவரின் விவரங்கள் அதில் இருந்தன.

காவலரை தாக்கியது பன்னீர்செல்வம் மற்றும் விஜயகுமார் என்பதும் இவர்கள் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. குற்றவாளிகள் அந்தப்பகுதியை விட்டு வெளியேற வாய்ப்பு இல்லை என்பதால் காவல்துறையினர் அந்தப்பகுதியை சுற்றிவளைத்து தேடினர். அப்போது காட்டுப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். காவலரை தாக்கிய பன்னீர்செல்வம், ரஞ்சித், விஜயகுமாரை பூவிருந்தவல்லி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி முகநூல் பதிவு

இந்த நிலையில் அம்மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூவரின் கை மற்றும் கால்களில் கடுமையான காயம் இருந்தது. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காவல்துறை வட்டாரத்தில், அம்மூவரும் குளியலறையில் தடுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.  இது குறித்து  தி.நகர் டி.டி. அரவிந்தன் ஐ.பி.எஸ். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒன்றுபோல் மூவரும் குளியலறையில் விழுந்து காயம் ஏற்படுத்திக்கொண்டது ஆச்சரியமளிக்கிறது.