டெல்லி: ராமர் பாலத்தினை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ராமர் பாலத்தினை புராதன சின்னமாக அறிவிக்கக்கூடாது என்று  உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள பாம்பன் கடற்கரையில் இருந்து இலங்கையின் மன்னார் தீவுக்குச் செல்லும் பாலம் ராமர் பாலம் எனவும் ஆடம் பாலம் எனவும் அழைக்கப்படு கிறது.   இது கடலுக்குள் 35 கிமீ நீளத்துக்கு அமைந்துள்ளது.  இந்த பாலம் கடலின் ஆழமற்ற மற்றும் மணல் திட்டு பகுதிகளில் உள்ளது.   சுமார் 100 மீட்டர் அகாலம் மற்றும் 10 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் சுண்ணாம்புக் கற்களால் உருவானதாகக் கூறப்படுகிறது.

ராமர் பாலம் தொடர்பாக தனது நிலைபாட்டை மத்திய அரசு விரைவில் தெரிவிக்க உத்தரவிடவேண்டும் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு  வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது சமுத்திர கால்வாய் அமைக்கப்படுமானால் , அந்த கால்வாய் அமைப்பதற்கு எதிராக தான் 2009-ல் தொடர்ந்துள்ள வழக்கை விலக்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தார். அத்துடன், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும்  இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.  இந்த பல்வேறு கட்டு கட்ட விசாரணைகளைத்தாண்டி வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்தஆண்டு சுப்பிரமணியன் சாமி தரப்பில் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், , “ராமர் பாலம் என ஒன்று உள்ளதை மத்திய அரசு எனது முந்தைய மனுவுக்கு அளித்த பதிலில் ஒப்புக் கொண்டுள்ளது.   எனவே நான் கடந்த 2017 ஆம் ஆண்டு ராமர் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் இதுவரை அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   எனவே எனது தற்போதைய மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுகிறேன்”எனக் குறிப்பிட்டிருந்தார்.

இன்று இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.   நீதிபதிகள், “உச்சநீதிமன்றத்தில் தற்போது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.  எனவே நீங்கள் அளித்த மனுவை  3 மாதங்கள் கழித்துத் தாக்கல் செய்யுங்கள் என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ராமர் பாலத்தினை புராதன சின்னமாக அறிவிக்கக்கூடாது என  உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.