டில்லி,

யிர்கொல்லி விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தடை செய்ய இயலாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த் உள்ளது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, இளைஞர்களின் உயிரைக் குடித்து வருகிறது. உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகளை அடிமைப்படுத்தியுள்ள புளுவேல் ஆன்லைன் கேமால் இதுவரை சுமார் 3000க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த விளையாட்டு காரணமாக பலியான உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் பலர் இந்த விளையாட்டு காரணமாக மரணமடைந்துள்ளனர். எனவே,  இந்த விளையாட்டு தடை விதிக்க கோரி நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

புளுவேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்யக்கோரி, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்களை தடை செய்யாதது ஏன் எனவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க கடந்த  அக்டோபர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசுக்கு  உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

அதில், புளுவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய முடியாது. அவை ஆப்ஸ் சார்ந்த விளையாட்டுக்கள் என்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது  என தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிலில் திருப்தி அடையாத தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இது போன்ற மரணத்தை விளைவிக்கும் விளையாட்டுக்கள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தும் படி தெரிவித்துள்ளது.

மேலும், புளுவேல் விளையாட்டு ஒரு தேசிய பிரச்னை. மாநிலங்களில் இயக்கப்படும் தூர்தர்ஷன் மற்றும் தனியார் டிவி சேனல்களும் இத்தகைய மரண விளையாட்டுக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு உதவ வேண்டும் என தனது முந்தைய கருத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

இத்தகைய விளையாட்டுக்களால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தும் வகையிலான பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.