சென்னை: மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விக்கனைகளை தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் நீதிபதி தலைமையில் குலுக்கல் முறையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரி வேலுமணி என்பவர் உள்பட சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து, உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை என்றும், அதை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை  மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெரினா கடற்கரையை முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த   வழக்கில் சென்னை மாநகராட்சியின் மண்டல அதிகாரியையும், சென்னை மாநகர காவல் ஆணையரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் அடுக்கடுக்கான பல அதிரடி கேள்விகளை எழுப்பினர்.

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை ஏன் அமைக்க கூடாது.

மெரினாவில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா?

தினமும் எவ்வளவு குப்பைகள், எவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன?

மெரினா பராமரிப்புக்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?

கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?

கடை உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது?

குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்கு பிறகும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா?

மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைத்தீர்கள்?

மெரினாவில் அண்ணா சதுக்கம் முதல் லைட் ஹவுஸ் வரை எத்தனை இடங்களில் மொபைல் டாய்லெட்டுக்கள் உள்ளது?

அப்படி டாய்லெட்டுக்கள் இல்லை என்றால் மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் நடமாடும் கழிவறைகள் எப்போது அவை அமைக்கப்படும்?

மெரினாவின் அழகை பாதுகாக்க மாநகராட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன?

என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித் துறை, காவல்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சமுக ஆர்வலர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு ஏன் அமைக்கக்கூடாது என விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.