சென்னை: இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு சுங்க விலக்கு பெற நோடல் அதிகாரிகளை தமிழகஅரசு நியமித்து உள்ளது. அதன்படி விமான நிலையம், துறைமுகம் அமைந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களை நோடல் அதிகாரிகளாக  தமிழகஅரசு நியமித்து உள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் COVID-19 நிவாரணப் பொருட்களின் இறக்குமதி மற்றும் இலவச விநியோகத்திற்கு தற்காலிகமாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை கடந்த 3ந்தேதி மத்தியஅரசு வெளியிட்டது.  இதையடுத்து, இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு பெற, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை நோட்ல் அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்து உள்ளது.

அதன்படி விமானம் மற்றும் கப்பல் மூலம் கொரோனா நிவாரண பொருட்களை இறக்குமதி செய்யும்  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அதற்கான வரி விலக்கு பெற நோடல் அதிகாரிகளை  அணுகலாம் என்று அறிவித்து உள்ளது.

அதன்படி சென்னை துறைமுகத்துக்கு, ரெவின்யூ கமிஷனர் அல்லது சென்னை மாவட்ட ஆட்சிரையும்,  காட்டுப்பள்ளி, எண்ணூர் துறைமுகத்தக்கு திருவள்ளூர் கலெக்டரையும், சென்னை விமான நிலையத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரும், மதுரை , கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு அந்தந்த மாவட்ட  ஆட்சியர் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.