சென்னை: பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது என்றும், தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய கொடி குறியீடு-2002 மற்றும் தேசிய கவுரவங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில்,  முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வுகளுக்குப்பின் இந்த கொடிகளை தரையில் வீசிவிட்டு செல்லக்கூடாது.

மேலும், பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதைப்போல தேசியகீதம் பாடுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.