மதுரை: மருத்துவப்படிப்பில், நடப்பாண்டே அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், இந்த  விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கவோ,  உத்தரவிடவோ  முடியாது – உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

மத்தியஅரசு நீட் தேர்வை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், தமிழகஅரசு,   அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் இயற்றியது. இந்த சட்டம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், கவர்னர் பன்வாரிலால், அந்த மசோதாவுக்கு கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக நடப்பாண்டில், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதற்கிடையில்,  மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் வரை முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஆளுநரின் செயலர் பதில் தர உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில்,  அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7.5% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இதுவரை ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம்  காலக்கெடு விதிக்க முடியாது,  ஆளுநரின் பரிசீலனையில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா இருப்பதாகவும் அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை தமிழக்ததில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் மாநில அரசு தெரிவித்தது.

இதனையடுத்து, நீட் தேர்வு முடிவுக்கு பின் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை பற்றிய விவரத்தை அரசு எப்போது வெளியிடும் என கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன்,  இட ஒதுக்கீடு தாமதம் ஆவதால் அரசு பள்ளி மாணவர்களின் வேதனையை விவரிக்க முடியாது, கிராமப்புற மாணவர்களின் வருத்தம், வேதனை அளவிட முடியாது  எனக்கூறி   கண்கலங்கினார்.

இதனால் சிறிது நேரம் நீதிமன்றத்தில் அமைதி நிலவியது.