திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாசார்யாலு (வயது 45) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதியில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்கு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே திருப்பதி கோவில் பிரதான அர்ச்சகர் சீனிவாச மூர்த்தி உள்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவிலை மூட ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேவஸ்தானம் கோவிலை மூட முடியாது என அறிவித்து, பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தற்காலிக பிரதான அர்ச்சகரும், கோவிந்த ராஜசாமி கோயிலில் நிரந்தர அர்ச்சகராகவும் இருந்து வந்த சீனிவாசார்யாலு (வயது 45) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.