பெங்களூரு:  நிகழ்ச்சி ஒன்றில்,  முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மடாதிபதி ஆளும் பாஜக அரசை குறை கூறி பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் பொம்மை, அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், முதலமைச்சரின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில்  மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமியின் ஷங்கராந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினமாக மாநில முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, விழா மேடையில் பேசிய  மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமி, ”நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வு காண்பதில்லை. மகாதேவபுரா தொகுதியில் ஆண்டுதோறும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. சாலைகள், பாதாள சாக்கடைகள், கால்வாய்கள் மோசமான நிலையில் இருக்கின்றன. வெள்ளம் வந்தால் மட்டுமே அரசியல்வாதிகள் இங்கு வருகின்றனர். மற்ற நேரத்தில் இங்கு வருவதில்லை. அரசியல்வாதிகள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முயற்சிப்பது என்று சாடியதுடன், தேர்தல் நேரத்தில் வெற்று வாக்குறுதிகளை மட்டும் அளிக்கின்றனர்” என அரசை மாநில பாஜக அரசை  விமர்சித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மடாதிபதியின் கையில் இருந்து மைக்கை பிடுங்கினார். இது மேடையில் அமர்ந்திருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பேசிய முதலமைச்சர் பொம்மை,  நான் வெற்று வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதி அல்ல. நான் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும் அரசியல்வாதி. இங்குள்ள பிரச்சினையை தீர்க்க நிதி ஒதுக்கியுள்ளேன்” என்று கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் வாக்குகளை தீர்மானிப்பதில் மடாதிபதிகளின் பங்கும் உள்ளது. அங்கு இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் பொம்மையின் நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.