சென்னை:

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை  திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும் இந்நிறுவனம், மத்திய பல்கலைக்கழக ஆளுகையின்கீழ் செயல்படும்.

இந்தியாவில் முதன் முதலாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து 2004-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தொடர்ந்து சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அந்தந்த மாநிலங்களில் செம்மொழி வளர்ச்சிக்காக செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன.  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் செயல்பட்டன. ஆனாலும்  அவற்றுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது.

இதனால் செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மொழி குறித்த ஆராய்ச்சி மற்றும் மொழி  ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் பணிகளில் இந்த ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் தற்போதுள்ள 6 மொழிகளின் செம்மொழி நிறுவனங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் யோசனையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம், திருவாரூரில் இயங்கு  மத்திய தமிழ்நாடு பல்கலையுடன்  இணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (சென்டரல் யூனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடு) அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் முன்மொழிவு குறித்து விவாதிக்கப்பட்டு, அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பல்கலையுடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இணை்த்தால் அதன் பணிகள் முடங்கும் என்று தெரிவிக்கும் தமிழ் ஆர்வர்கள், “மத்திய அரசின் இம் முயற்சியை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கின்றனர்.