சென்னை:
நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக  நடைபெற்ற நிகழ்ச்சியில் – கழகத்தின் முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற (மறைந்த) மானமிகு மா.மீனாட்சிசுந்தரத்தின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அறுவடை செய்த நெல் மழையில் அழிந்து போகிறது. நெல்லை வாங்க நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை. நெல்லுக்குரிய விலையும் கொடுக்கவில்லை.

குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உயர்த்திக் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமில்லை.சன்ன ரக நெல், குவிண்டால் ஒன்றுக்கு 1,958 ரூபாய், சாதாரண ரக நெல்லுக்கு, 1,918 ரூபாய். இந்த விலை எப்படி கட்டுப்படியாகும்? நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அதுபற்றி முதலமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை. அதேநேரத்தில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலையையும் ரத்து செய்யும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது அ.தி.மு.க. இன்றைக்கு அந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கினை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம் “இதற்குப் பதில் சொல்லுங்கள்” என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஆனால் அ.தி.மு.க.-வுக்கு, அந்த வழக்குகளில் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளக் கூட தைரியம் இல்லை. ரெய்டுகளுக்குப் பயந்து – விவசாயிகளின் நலனை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்துள்ள அரசு – பழனிசாமி அரசு. நேற்றைக்குக் கூட பாருங்கள். ஆகவே விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பா.ஜ.க. அரசுதான், அ.தி.மு.க. என்ற ஊழல் அரசுக்கு பாதுகாவலன்; விசுவாசமிக்க பாதுகாவலன்! இந்த விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பா.ஜ.க. அரசையும் – “விவசாயி” “விவசாயி” என்று சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அ.தி.மு.க. அரசையும் விரட்டி அடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார்.