சென்னை: தமிழ்நாட்டில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம் என்றும், உடனே யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார்.

துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ள பாரதியார், பாரதிதாசன், பெரியார் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதில், யுஜிஜி பிரதிநிதி இடம்பெறவில்லை. இதனால், யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிடுமாறு பல்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், யுஜிசி விதிமுறைகள்-2018-ன்படி பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் சட்டத்தின்படி, தேடுதல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் ஒருவர் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரால் துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தேர்வு செய்ய வேந்தருக்கு பதிலாக அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
அவகாசம் நீட்டிப்பு: இத்தகைய சூழலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்ய தேடுதல் குழுக்கள் அமைத்திருப்பதும், அக்குழுக்களுக்கான காலஅவகாசத்தை நீட்டித்திருப்பதும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்துவரும் நிலையில் துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கான கால அவகாசத்தை மார்ச் 21 வரை நீட்டித்து கடந்த டிசம்பர் 22-ம் தேதி தமிழக அரசால் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலும், இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசு எடுத்த நிர்வாக நடவடிக்கைகள் சட்டத்துக்கு புறம்பானவையாகும். மேலும் அவை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானவையாகும்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவை சட்டப்படி செல்லாது. அதோடு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, புதிய துணைவேந்தர் தேர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் தேடுதல் குழுக்களில் யுஜிசி உறுப்பினரையும் சேர்த்து உடனடியாக அரசாணைகளை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்வுக் குழு விஷயத்தில், மாநிலச் சட்டங்கள் யுஜிசி விதிமுறைகள் மீறுகின்றன என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 2018 விதிமுறைகளின்படி கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு முரணாகத் தேர்வுக் குழுவை அமைக்கும் எந்தவொரு மாநிலச் சட்டமும் அந்த நியமனத்தைச் செல்லாததாக்கிவிடும்.
இத்தகைய குழுக்களின் அமைப்பு, நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்ட உயர்கல்விக்கான தேசியத் தரங்களின் ஒரு பகுதியாகும் (யூனியன் பட்டியல், பிரிவு 66) என்பதை வலியுறுத்திய நீதிமன்றம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம், 2019-இன் பிரிவு 14(5)-ஐ ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்தது.
யுஜிசி விதிமுறைகளுக்கு முரணான ஒரு குழு அமைப்பை வகுத்ததால், அந்தச் சட்டப் பிரிவு அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என அறிவிக்கப்பட்டது. சட்டப் பிரிவு செல்லாது என்றாலும், தற்போதைய துணைவேந்தர் டாக்டர் எஸ். மோகனின் தகுதிகள் மற்றும் நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படாததால், அவர் தனது பதவிக்காலம் முடியும் வரை அல்லது சட்டப்பூர்வமான நியமனம் செய்யப்படும் வரை பதவியில் தொடரலாம் என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]