மதுரை: 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் 1,295 சதுர அடி பரப்பளவில், 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் 100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக்கூடிய 25 அறைகளுடன் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, மதுரையில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு,  குத்து விளக்கு ஏற்றினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தற்போது நாடளுமன்றக் கூட்டம், சுதந்திர தினம் வருவதால் இந்த மாதம் கூடும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தள்ளி போகிறது. அநேகமாக மதுரையில் 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும் என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் அளித்தவர், கால நிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினை வைத்து நிறைய கற்றுக் கொண்டோம். மழையினால் பாதிப்புகள் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்றவர், அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது என்றவர், மதுரையின் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சிறப்பு பிளான் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக ஆட்சி காலத்திற்குள் மதுரையில் குடிநீர், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை பிரச்னைகளைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்” என்றும் தெரிவித்தார்.