சென்னை:

த்தியஅரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

மத்தியஅரசு  புதிய கல்வி வரைவு கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது.  இதில் மும்மொழிக்கொள்கை வலியுறுத்தப்பட்டு உள்ளது.  அதன்படி,  சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும். எந்த மொழியை யும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை, அயல்நாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம். மூன்றாவது மொழி என்ன என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டது. இதற்கு தமிழகம் உள்பட சில  மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று (ஆகஸ்டு 3ந்தேதி) ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,தமிழக அரசு  மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும், த மிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

தமிழகஅரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று நன்றி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டி விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள CMOTamilNaduவுக்கு நன்றி! மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!

முன்னதாக, தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள், இணைந்து,  தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.