மதம்மாற வற்புறுத்தியதால் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பமாக குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு புகார் வந்தது தெரியவந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த உதவி மையத்திற்கு அழைப்பு விடுத்த நபர் மாணவிக்கு அவரது மாற்றாந்தாய் செய்து வரும் கொடுமை குறித்து புகாரளித்தது தெரியவந்திருக்கிறது.

தஞ்சாவூர் சேக்ரட் ஹார்ட் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி பள்ளி விடுதியில் இந்த மாதம் 9 ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 19 ம் தேதி உயிரிழந்தார்.

இதுகுறித்து, காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பள்ளி நிர்வாகம் மதம் மாற வலியுறுத்தியதாலும் பொங்கல் பண்டிகைக்கு விடுதியில் இருந்து ஊருக்கு செல்ல அனுமதி அளிக்காததாலும் மன உளைச்சலுக்கு ஆளான தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி லாவண்யாவின் தந்தை பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினார்.

தற்கொலை விவகாரம் மதம்மாற்றம் என்ற கோணத்தில் அணுகப்பட்ட நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் சி.பி.ஐ. விசாரணைக்கும் வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில் 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் 1098 என்ற சிறுவர் உதவி மைய எண்ணை தொடர்பு கொண்ட நபர் மாணவிக்கு நேர்ந்து வரும் மாற்றாந்தாய் கொடுமை குறித்து புகாரளித்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.