மதுரை: திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணைக்கு அருகே குவாரிகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  “திருச்சி, கல்லணை மற்றும் அதை சுற்றி உள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மணல் எடுப்பது தொடர்ந்தால் கல்லணை சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே கல்லணையில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டர் தொலைவில் மணல் எடுக்க இடைக்கால தடை விதிக்க உத்தரவிட வேண்டும். அந்தப் பகுதிகளில் குவாரி நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்றிலுமாக தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்,  “அந்தப் பகுதியில் 4 அரசு குவாரிகள் செயல்படுவதாகவும், உரிய அனுமதி பெற்று குவாரி இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “குவாரிகள் அனுமதி பெற்று இயங்கினாலும், விதிகள் மீறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் ஜனவரி 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,  அதுவரை கல்லணையின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டருக்குள் இயங்கும் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அறிவித்தனர்.

மேலும், குவாரி செயல்பாடுகளில்,  முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும் எனக் கூறி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.