ஐதராபாத்: தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னதாக சிரஞ்சிவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அவர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், தற்போது ராம்சரணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 25ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடியதாக ராம்சரண் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இது குறித்து ராம் சரண் தனது டிவிட்டர் பக்கத்தில்,  எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று வந்துள்ளது. எந்த அறிகுறியும் இல்லை. வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் குணமாகிவிடுவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் மேலும் அப்டேட் கொடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு என்றால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மொத்த குடும்பத்தாரும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு பரிசோதனை செய்தபோது சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். குணமடைந்த பிறகு தன் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவின் திருமணத்தில் கலந்து கொண்டார் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.