ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள ஆர்மூர் என்ற இடத்தின் மஞ்சள் விவசாயிகள், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எரித்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக, தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக, தமிழ்நாட்டு மஞ்சள் விவசாயிகளுக்காக மஞ்சள் வாரியம் அமைப்போம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இதுதான், தெலுங்கானாவில், அந்த குறிப்பிட்ட பகுதியின் மஞ்சள் விவசாயிகளை கொதிப்படையச் செய்துள்ளது. ஏனெனில், தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று பாஜக ஏற்கனவே அந்த மாநிலத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தது.

ஆனால், அந்த வாக்குறுதியை இன்றுவரை அக்கட்சி நிறைவேற்றவில்லை. தற்போது, அதே போலி வாக்குறுதியை, தமிழ்நாட்டிலும் வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டியே, தெலுங்கானா விவசாயிகள் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை எரித்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.