திருமலை:
கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் திர்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மொகுலய்யா. இவர் உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஆவார். இவர் கடந்த 11ம்தேதி தனது பேத்தியின் பிறந்த நாளை, பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். மெகா சைஸ் கேக் வெட்டி விழாவுக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விழாவுக்கு வந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் அன்றிரவு விடிய விடிய குத்தாட்டம் நடந்துள்ளது. இதில் இளம்பெண்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்றபடி நடனமாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த போலீசாரும், ஆளும் கட்சிப்பிரமுகர் என்பதால் கண்டும் காணாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிறுமிக்கு பரிசுப்பொருட்கள் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தெலங்கானாவில் மாலை 6 மணிக்கு பிறகு சாலையில் சுற்றுபவர்களை விரட்டிப்பிடித்து அபராதம் விதிக்கும் போலீசார், ஆளுங்கட்சி பிரமுகரின் குடும்ப விழாவில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பாட்டு, ரெக்கார்ட் டான்ஸ் ஆகியவற்றில் உற்சாகமாக கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.