திருவண்ணாமலை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் வாக்கு வேட்டையாடி வருகிறார். இன்று காலை, திருவண்ணாமலை  தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.  அப்போது எப்போதும்போல, டீக்கடையில் டீ குடித்தும் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக திருவண்ணாமலை வந்த  மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்குவாக்கு சேகரித்தார். நடைபாதை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் மாடவீதியில் நடந்து சென்று, சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்குகள் கேட்டார். இதையும் படியுங்கள்: புளியம்பட்டி அருகே கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி ஜோதி பூ மார்க்கெட் சென்றார். வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்குகள் கேட்டார்.

மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அனைத்து வியாபாரிகள் சார்பில் மலர்மாலை, சால்வை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். நடந்து சென்ற முதலமைச்சர் மீது மலர் தூவினர்.  அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு சென்று கற்பூரம் விற்பனை செய்யும் பெண்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு கேட்டார். அப்போது, பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுடன் அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தேரடி வீதியில் உள்ள கடை வியாபாரிகள், மக்களிடம் திமுகவுக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரம் வழங்கினார்.

கடைசியாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள டீ கடையில் மு.க.ஸ்டாலின் இஞ்சி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு  திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி, சோ.காட்டுக்குளம் பகுதியில்நடைபெறும் திமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தால் மாடவீதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரசாரத்தின்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக,  நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து,  நேற்று இரவு அருணை கல்லூரி வளாகத்தில் தங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி, கல்லை கடை சந்திப்பு அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.