மும்பை

தீவிர புயலாக உருமாறி உள்ள டவ்தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவான டவ்தே புயல் தற்போது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்றி நள்ளிரவு நிலவரப்படி கோவா மாநிலத்தின் பனாஜி நகரிலிருந்து 190 கிலோமீட்டர் தென்மேற்கு திசையிலும் மும்பையில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலும் டவ்-தே புயல் மையம் கொண்டிருந்தது.

தற்போது தீவிர புயலாக உருமாறி உள்ள டவ்தே 12 மணிநேரத்திற்குள் அதி தீவிர புயலாக மாறும் எனக் கணித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்-நாலியா இடையே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக, கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் செவ்வாயன்று குஜராத்தில் டவ் தே புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன் 5 மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எனவே கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 50க்கு மேற்பட்ட பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 2 நாட்களில் கேரளா, கர்நாடகா, கோவாவில் கடலோர பகுதிகளில் பெரு மழை பொழிந்து நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயலையொட்டி அரபிக்கடலோர் மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.,

புயலை எதிர்கொள்வது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடம் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.  அந்த கூட்டத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

புயல் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே மழை பெய்து வருகிறது. டவ்தே புயலைச் சமாளிக்க மகாராஷ்டிரா அரசும் தயாராகி வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள கடற்கரையோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.