சென்னை:
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பொது விடுமுறையை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“நிவர் புயல் காரணமாக நவ.25 (நாளை) அரசு அலுவலகங்களுக்குப் பொது விடுமுறை அளித்திருப்பதாகவும், நிலைக்கேற்ப விடுமுறை நீடிப்பது தொடர்பாகவும் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தப் பொது விடுமுறையில் டாஸ்மாக் கடைகளுக்கான விடுமுறை குறித்து எந்தவித அறிவிப்பும் நிர்வாகத் தரப்பில் வெளியிடாதது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினத்திலிருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நிவர் புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

நிவர் புயல் அதிதீவிரப் புயலாக மாறி கடலோர மாவட்டங்களை மட்டுமல்லாமல் உள்மாவட்டங்களையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பேராபத்து உள்ளது.

பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக முதல்வர், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடிட உத்தரவிட வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கிறது”.

இவ்வாறு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.