பெங்களூரு: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். இதை பெங்களூரு மருத்துவமனை அறிவித்து உள்ளது.

குன்னூர் அருகே கடந்த 8ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த  முப்படை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர்  பலியானார்கள். குரூப் கேப்டன் வருண்சிங் மட்டும் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடல் முழுவதும் சுமார் 80 சதவிகிதம் தீயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக லெப்டினெட் ஜெனரல் அருண் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில், வருண்சிங் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனை அறிவித்து உள்ளது.